விருதுநகர்: வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த இளம் பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் 22 வயது மகளுக்கு சூலக்கரையைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் பெற்றோரின் வீட்டிலேயே அவர் இருந்தாராம். இந்நிலையில் இவர் திடீரென கடந்த பிப்.15-ல் மாயமானார். இது குறித்து சூலக்கரை போலீஸில் தந்தை கணேசன் புகார் செய்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்ததில் ஒருமுறை சிக்னல் கிடைக்கவே, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவில்பட்டியில் இருந்து அவர் பேசியது தெரிந்தது. அப்போது, மாயமான பெண்ணின் செல்பேசி மற்றொரு பெண்ணிடம் இருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்ததில் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். மாயமான பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் இருந்ததாகவும், அவரைச் சந்திக்கவே கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்த 5 சவரன் நகை, பணத்துடன் சென்றதும் தெரியவந்தது. அந்த இளைஞரைச் சந்திக்க முடியாத நிலையில் கோவில்பட்டிக்கு வந்த அந்தப் பெண், பாண்டி என்பவரைச் சந்தித்துள்ளார். அவரை அணுகி வேலை கேட்டதும், அவர் அப்பெண்ணை அதே பகுதியில் அந்தோணிராஜ் (55), மாரியம்மாள் (50) ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இருவரும் செண்பகவல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்வதியிடம் ஒப்படைத்தனர். அவர் இளம்பெண்ணிடம் இருந்த பணம், நகை மற்றும் செல்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டதுடன், வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். சில நாள்களுக்கு பின் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, சூலக்கரை காவல் ஆய்வாளர் எஸ்.அன்னராஜ் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தோணிராஜ், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாண்டி, பார்வதி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேர் கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

