சென்னை: காவிரி நீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அதன் தலைவர் .சந்திரசேகரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் பாயும் காவிரியில் தமிழகத்திற்கான பங்கு வரையறை செய்யப்பட்டு, காவிரி நடுவர் மன்ற ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரைப் பெறுவதில் தமிழகத்திற்கு அநீதியே இழைக்கப்பட்டு வந்துள்ளது. கர்நாடகத்தில் அதிக மழை பெய்து அதனால் வெள்ளம் ஏற்பட்டால் மட்டும் உபரி நீர் நமக்கு திறந்துவிடப்பட்டுவருகிறது. அதாவது வெள்ள வடிகாலாகவே தமிழத்தை கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே எந்த அனுமதியும் பெறாமல் கர்நாடகம் புது அணைகள் கட்ட முயற்சிப்பது, தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது ஒரு டெல்டா விவசாயிகளின் பிரச்சினை என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல், டெல்டா விவசாயி விவசாயம் மேற்கொள்ளாவிட்டால், நாம் சாப்பிட அரிசிக்குக் கூட வெளிநாட்டில் கையேந்தும் நிலை வந்துவிடும் என்று எண்ணிப்பார்த்து, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டிய நேரமிது. இது காவிரி டெல்ட்டா விவசாயிகளுக்கான போராட்டம் என்று நினைக்காமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை உணர்ந்து, காவிரியில் கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டும் பிரச்சினைக்காக, வரும் 28-03-2015, சனிக்கிழமை நடைபெறும் முழு அடைப்பில் கலந்துகொண்டு, நமது ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்… என்று கூறியுள்ளார்.
முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: சிவாஜி பேரவை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

