சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் உற்சவத்தை ஒட்டி, பெருந்திரளான மக்கள் உற்ஸவத்துக்கு வருவர் என்பதால், போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி திருவிழா இன்று (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கீழ்கண்டவாறு கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. கச்சேரி சாலையிலிருந்து, மத்தள நாராயணன் தெருவிற்கும், சித்ரகுளம் கீழ் தெருவிலிருந்து சித்ரகுளம் வடக்கு தெருவிற்கும், நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து, கிழக்கு மாட தெருவிற்கும், ஆர்.கே. மடம் சாலையிலிருந்து தெற்கு மாட தெருவிற்கும், புனிதமேரி சாலையிலிருந்து ஆர்.கே. மடம் சாலை சந்திப்பிற்கும், டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலைக்கும், லஸ் சந்திப்பிலிருந்து, ஆர்.கே. மடம் சாலைக்கும் வாகனம் அனுமதிக்கப்படமாட்டாது.
- ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, சி.பி.ரமசாமி ரோடு, புனித மேரி சாலை, ஆர்.கே.மடம் ரோடு வழியாக மந்தைவெளி அடையலாம்.
- அடையாரிலிருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி, வி.கே.அய்யர் ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, டாக்டர் ரங்காரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் ரோடு, கற்பகம்மாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ்.சிவசாமி சாலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் அடையலாம்.
- மைலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் தேர்திருவிழா அன்று காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 2-ந் தேதி அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும் தினத்தன்றும் பிற்பல் 2 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.


