திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை பிரசாரம் ஓய்வதையொட்டி வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் அலுவலர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு: “ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வரும் 13ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு முன்பாக உள்ள 48 மணி நேரம் என்பது இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் 13 ஆம் தேதி மாலை 6 மணி வரை. இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பேரணிகள் பொதுக் கூட்டங்கள் போன்ற எந்தவிதமான பிரசாரமும் செய்யக் கூடாது. மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்கு வெளியே இருந்து பிரசாரத்திற்காக அழைத்து வரப்பட்டவர்களும், தொகுதியில் வாக்காளர்களாக இல்லாத அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்களும் தொகுதியிலிருந்து உடனடியாக வெளியே செல்ல வேண்டும். ஏற்கேனவே பிரசார காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 6 மணியுடன் தானாகவே ரத்தாகிவிடும். வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்துவதற்கு வேட்பாளருக்கு ஒரு வாகனமும், அவரது தேர்தல் முகவருக்கு ஒரு வாகனமும், அவரது தொண்டர்களுக்கு ஒரு வாகனமும் ஆக மொத்தம் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்கான வாகன அனுமதியை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனியாக பெற வேண்டும்” – இவ்வாறு அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இடைத். தேர்தலில் 29 பேர் போட்டியிடுகின்றனர். எனவே, இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் “நோட்டோ” வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் இயந்திரங்கள் அனைத்தும் “சீல்” வைக்கப்பட்டு திருச்சி சாராநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். வரும் 16 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.
மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதிக் கட்டப் பரபரப்பு
Popular Categories


