சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டதால், அது சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். மேலும், வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் அப்பலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி. அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தருவதில் அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு கவனம் செலுத்தியது. அப்பல்லோ மருத்துவர்களும், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பாக சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவை யார் யார் சந்திக்க வேண்டும் என்பதை உடன் இருந்தவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது உறவினர்கள் சிலர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக அளித்தோம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடப்பதால் அதுபற்றி தற்போது வெளிப்படையாக வேறு எதையும் கூற முடியாது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் பிரதாப் ரெட்டி.
அப்போது செய்தியாளர்கள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமாக செயலிழக்க வைக்கப் பட்டன. அதனால்தான் அவர் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் எதுவும் கைவசம் இல்லாமல் போனது. ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விடியோ காட்சிகளைப் பார்க்க நேரிடும் என்பதற்காகவே சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டன என்று கூறினார் பிரதாப் ரெட்டி.
இந்த விவகாரம்தான், மர்மமாக உள்ளது என்பது தமிழக மக்களின் பெரும் ஆதங்கம். ஒரு வீடியோ கூடவா மருத்துவமனையில் இல்லாமல் போனது? என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.