சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் திருவொற்றியூரைச் சேர்ந்த கே.பி.பி.சாமி. இவருடைய மகன் இனியவன் (வயது 28). இவருக்கு பிரசன்யா என்ற மனைவியும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். தந்தையுடன் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கே.பி.பி. சாமி வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இனியவனுக்கு குடிப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மொட்டை மாடியில் உள்ள தனி அறைக்குச் சென்றுள்ளார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கீழே உள்ள அறையில் படுத்து தூங்கி உள்ளனர். இன்று காலை விடிந்து வெகு நேரமாகியும் இனியவன் எழுந்து வராததால் அவருடைய மனைவி மாடியில் உள்ள அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னலைத் திறந்து பார்த்த போது இனியவன் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனே அலறியடித்தபடி கீழே வந்து குடும்பத்தினரிடம் பிரசன்யா தகவல் தெரிவித்தார். இது குறித்து வந்த புகாரை அடுத்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து, கே.பி.பி.சாமி குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கே.பி.பி. சாமி, அவரது தம்பியும் திமுக கவுன்சிலருமான கே.பி.பி.சங்கர் ஆகியோர் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்ட்டது.

