
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
இது தொடர்பாக எடப்பாடி தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்பட செய்தியிலும் அறிக்கையிலும் தெரிவித்துள்ளதாவது…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். நீதிமன்ற உத்தரவை 6 வாரத்திற்குள் அமல்படுத்த திட்டம் வகுக்க வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்ற உத்தரவையும் இறுதி தீர்ப்பில் இணைத்துள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, உத்தரவில் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது.
காவிரி தண்ணீரை நம்பியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், ஜூன் 1க்குள் விவசாய பணிகளை துவங்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். உரிய அதிகாரத்துடன், உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத்தின் அதிகாரத்துடன், காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.



