சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்த வதந்திகள் அதிகம் பரவி வருகின்றன.
இதை அடுத்து, அதற்கு விளக்கம் கொடுத்து திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். தொண்டர்கள் அமைதி காக்குமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டுப் பார்த்தார். ஆனாலும், தொண்டர்கள் கவலையுடன் அதிக அளவில் கருணாநிதி வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கும், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கும் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்பப் பட்ட போது, கருணாநிதி ஓர் அறிக்கை விடுத்தார். அதை பலரும் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப்களில் பரப்பவிட்டு பகிர்ந்துள்ளனர்.
அந்த தகவலில், ”அவருடைய உடல்நிலை பற்றிய செய்தியை மூடு மந்திரமாக வைத்திருப்பதால் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதைத் தடுக்க அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும்” – மு. கருணாநிதி, 30 செப்டம்பர் 2016 அன்று ஜெ. குறித்து விடுத்த அறிக்கை…. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இதை அடுத்து கருணாநிதி சிகிச்சை பெரும் படம் ஒன்றை வெளியிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படி ஒரு படத்தை திமுக.,வினர் ஷேர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வெளியிட்டுள்ளனர். இப்போது எடுக்கப் பட்ட படம்.. உடன்பிறப்பே அதிகம் ஷேர் செய்யவும் என்ற வேண்டுகோளுடன் இந்தப் படம் உலாவருகின்றது.


