சென்னை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் மறைவுக்கு பாமக., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தி…
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பேரூர் ஆதீனத்தின் மூலம் ஆன்மிகப் பணி மட்டுமின்றி, மிகச்சிறப்பாக தமிழ் பணியும் மேற்கொண்டார். கோவில் குட முழுக்குகளையும், திருமணங்களையும் தமிழ் முறைப்படி நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தியவர். அறநெறியும், சமயநெறியும் மாறாமல் வாழ்ந்த அவர், தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுத்தவரும் ஆவார்.
கொங்கு மண்டலத்தில் தமிழ் கல்லூரி மூலம் தமிழைப் பரப்பினார். கொங்கு மண்டலத்தில் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர். என் மீது அன்பும், பற்றும் கொண்டவர் ஆவார். பேரூர் ஆதீனத்தின் மறைவு அங்குள்ள மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



