புதுச்சேரியில் 2 முக்கிய சாலைகளுக்கும், பட்ட மேற்படிப்பு மையத்திற்கும் கலைஞர் பெயர் சூட்டப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களின் நல்வாழ்வு மற்றும் உரிமைகளுக்காகவும், முழு மாநில அந்தஸ்து வழங்கப்படவும் தொடர்ந்து பாடுபட்டவர் கலைஞர். புதுச்சேரி 100 அடி சாலையில் இந்திராகாந்தி சிலை மற்றும் ராஜீவ் காந்தி சிலைக்கு இடைப்பட்ட சாலைக்கும், காரைக்கால் – திருநள்ளாறு புறவழிச் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்துக்கும் கலைஞர் பெயர் சூட்ட புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று புதுவை முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தி.மு.க. சார்பில் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாகவும், புதுச்சேரி மக்களுக்கு தி.மு.க. உணர்வுபூர்வமாகத் துணை நிற்கும் என்றும் புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல்கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.