சென்னை: தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததற்காக எம்.எல்.ஏ கருணாஸ் ஞாயிறு இன்று காலை கைது செய்யப் பட்டார்.
நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு கடந்த 16ம் தேதி சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ், “காவல் துறையினர், யார் மீது வேண்டுமானாலும் குண்டாஸ் போடுகிறார்கள். கை, காலை உடையுங்கள் என்று சொல்கிறார்கள். ஒருவரை அடித்து மிரட்டி கை, காலை உடைக்கச் சொல்வது என்ன நியாயம்?
முக்குலத்தோர் சமுதாயத்தினரின் கை, கால்களை உடைப்பவர்களின் கை, கால்களை நீங்கள் உடையுங்கள்; பாத்துக்கலாம்.
அதிகார திமிர் தானே உங்களை இவ்வாறு செய்ய வைக்கிறது?. நீ கொலை கூட பண்ணு, என்னிடம் சொல்லிவிட்டு பண்ணு (தொண்டர்களிடம்). கொலை செய்தால் அதில் நியாயம் இருக்க வேண்டும். உன்னை வாழ விட வில்லை என்றால் கோபம் வரத்தான் செய்யும்.
தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம். ஃபிலிம் காட்டவில்லை, வழக்கு, ஜெயில், பெயில் எல்லாம் வரும், பார்த்துக்கலாம்.
சில போலீஸ் அதிகாரிகள் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ரவுடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை கூற வேண்டும்” என்று பேசினார்.
மேலும் முதலமைச்சர் பழனிசாமியே தன்னைக் கண்டு பயந்து ஓரமா ஒதுங்கி செல்கிறார் என்று பேசினார் கருணாஸ்.
காவல்துறையினரை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னையில் ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர், காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், அவர் மீது 8 பிரிவுக ளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து, கருணாஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
கருணாசின் பேச்சு முதல்வரின் கவனத்திற்கு சென்றிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். சட்டத்தை மீறி யார் பேசினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் கருணாஸை கைது செய்தனர்.