நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை நேற்று நள்ளிரவு தாக்கிய கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய கஜா புயலால் ஏசுநாதர் சிலை பாதிக்கப் பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி ப்ரியாமணி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், வரும் 6 மணி நேரத்தில் புயல் வழுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் உள்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் கனமழை காரணமாக பாம்பன் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.கஜா புயல் காரணமாக 6 மாவட்டங்களில் 431 மையங்களில் 81 ஆயிரத்து 698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு, பகல் 12 மணிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.