கோவையில் காருண்யா பல்கலைக்கழக விடுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையை அடுத்த சிறுவாணி சாலையில் காருண்யா நகரில் இயங்கிவரும் காருண்யா பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரைச் சேர்ந்த ஆம்பர்பிரகாஷ் கல்கோ கடந்த 2011-15 கல்வியாண்டில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்துள்ளார்.
பாடத்தில் அரியர் வைத்துள்ளதால், பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை விடுதியில் உள்ள அறையில் மின் விசிறியில் கயிறு கட்டி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது.
இது குறித்து காருண்யா பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அளித்ததன் பேரில், விடுதி அறைக்கு வந்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் ஆம்பர்பிரகாஷ் இந்தியில் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.