குடும்ப பிரச்னை காரணமாக, பெற்ற தாயே தன் மகனைக் கொலை செய்து தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயகாந்தன் என்ற இவர்களது 6 வயது மகன், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 27ஆம் தேதி கணவனுடன் ஏற்பட்ட தகராறால், மீனாட்சி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அடிக்கடி இதுபோல் நடந்ததால், பெற்றோர் இவரைக் கண்டு கொள்ள வில்லை. இதனால், அங்குள்ள தனி வீட்டில் மீனாட்சி தனது மகனுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், மகன் ஜெயகாந்தன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்துக் கொலை செய்த மீனாட்சி, வீட்டின் பின் பகுதியில் உள்ள தொட்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.
பின்னர் மாங்காட்டில் உள்ள கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்ட மீனாட்சி, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் அலைந்து திரிந்துள்ளார். பின்னர் திடீரென அந்த முடிவைக் கைவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து பூந்தமல்லி போலீசார், மீனாட்சியை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்!