வேலைக்கு வராவிட்டால் ஊதியம், விடுப்பு இல்லை என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது என்று தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வேலைக்கு வராமல், வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜன.22 நாளை முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் வேலைக்கு வராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம், விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு விடுப்பு கிடையாது.
ஜனவரி 22ஆம் தேதி காலை 10.30க்குள் ஊழியர்களின் வருகைப் பதிவு குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை தினமும் வருகை பதிவு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்… இவ்வாறு தலைமைச் செயலாளரின் உத்தரவில் கூறப் பட்டுள்ளது.