எனது தந்தை மரணத்தில் மார்ட்டின் நிறுவனத்தில் வேலை செய்யும் 2 பேர் மீது சந்தேகம் உள்ளது. தந்தையை தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர்; அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. வருமான வரித் துறையினர் விசாரணையின்போது எனது தந்தையை துன்புறுத்தியுள்ளனர் என்று மார்ட்டின் அலுவலக காசாளர் மகன் ரோகின்குமார் புகார் கூறியுள்ளார்.
தன் தந்தையின் தலை, முகம் ஆகியவற்றில் காயங்கள் இருந்ததாகவும், அவரை உடன் பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் கொலை செய்திருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்த காசாளர் பழனிச்சாமி என்பவரின் மகன் புகார் கூறியுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனைகள் நடந்தன. இந்நிலையில் அவரது நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்த பழனிச்சாமி என்பவர், வெள்ளியங்காடு என்ற இடத்தில் குட்டை ஒன்றில் சடலமாகக் கிடந்தார். இதை அடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, தனது தந்தையின் உடலை நீதிபதி முன்னிலையில் தங்கள் தரப்பு மருத்துவருடன் உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி, பழனிசாமியின் மகன் ரோகின்குமார் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தையை மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இருவரே கொலை செய்திருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக கூறினார்.
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தால், வீட்டில் தற்கொலை செய்து கொள்ளாமல், ஏன் அவ்வளவு தூரம் சென்று தற்கொலை செய்து கொண்டார்? அதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய ரோஹின் குமார், நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார் என்றால் அவருக்கு காயம் ஏற்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பழனிச்சாமி மரணம் தொடர்பாக, இரு பிரிவுகளின் கீழ் காரமடை போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டுதல், சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பழனிசாமியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வருமான வரித்துறையினர் மிரட்டினர் என்று கூறப் படுவதால், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.