முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவா் ஓட,ஓட வெட்டிக் கொலை..!
சிவகங்கை அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் கண்மாய்க்குள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை சி.பி. காலனியை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கண்ணன் (வயது 27). இவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் நகரில் சொந்தமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று மதியம் கண்ணன் சிவகங்கையில் உள்ள ஆட்டோ நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். மேலும் நாள்தோறும் ஆட்டோ நிலையத்திலிருந்து பக்கத்து கிராமமான ஈசனுாருக்கு பயணிகளை ஏற்றி செல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.
நேற்று மதியம் ஒருவரை மட்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஈசனூருக்கு சென்றுள்ளார். அப்போது இலந்தகுடிபட்டி கண்மாய் அருகே சென்ற போது, ரோட்டில் நின்றிருந்த சிலர் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அவர்களுடன் ஆட்டோவில் வந்தவரும் சேர்ந்து ஆட்டோ டிரைவா் கண்ணனிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயன்றனராம். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட கண்ணன் அந்த கும்பலிடமிருந்து தப்பிபதற்காக கண்மாய் பகுதிக்குள் ஓடியுள்ளார்.
ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று கண்மாய்குள் வைத்து கண்ணனை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், நகர் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் அங்குவந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கண்ணன், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ஆனந்த் என்பவருடன் தகராறு செய்து அவரது ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாகவும், இதுதொடர்பாக இருதரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ஆனந்த் தரப்பினர் கண்ணனை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக ஆனந்த் (28), ரஞ்சித் (27), அரவிந்த் (27), பிரவீன் (24), வசந்த் (25), அருண்பாண்டியன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக அரவிந்த், பிரவீன், வசந்த், அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்டோ டிரைவா் வெட்டி கொலை செய்யப்பட்டது. அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


