காஞ்சிபுரம்: கோயில் வரை செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெறும் கோயிலுக்கு அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்தார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தற்போது புகழ் பெற்ற வைபவமான அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் குளத்துக்குள் இருந்து வெளியில் எழுந்தருளி தரிசனம் தருகிறார். முன்னர் இந்த வைபவம் 1979-இல் நடந்தது.
தொடர்ந்து இந்த ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எழுந்தருளச் செய்யப்பட்டு, இந்த வருடம் காட்சி தருகிறார். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. தற்போது அத்தி வரதர் அனந்த சயனத்தில் காட்சி தருகிறார். அத்திவரதர் வைபவத்துக்காக 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது. இதற்காக போக்குவரத்து மாற்றமும் செய்யப் பட்டது.
இந்த நிலையில் அத்திவரதர் தரிசனம் அளிக்கும் கோயில் அருகே சென்றுவர அனுமதிச் சீட்டு தன்னிடம் இருந்தும், தனது ஷேர் ஆட்டோவை காவல்துறையினர் அனுமதிக்காததால் அதிருப்தி அடைந்தார் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார். இதை அடுத்து, அவர் போலீஸாரை கண்டித்து, கோயிலுக்கு அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற உடனடியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட போலீஸார், அவரது ஷேர் ஆட்டோவிலேயே அவரை ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.