பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை வனிதாவை கைது செய்து அழைத்துச் செல்லலாம் என்று வந்த தெலங்கானா போலீஸார், புகார்தாரரின் மகள் அளித்த வாக்குமூலத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவுக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்து ஆனது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானா மாநிலத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
இதை அடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் வனிதா இருப்பிடம் தெரியாத நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் குறிப்பிட்டனர். இந்நிலையில் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், ஆனந்த ராஜ் அதைக் குறிப்பிட்டு, போலீஸில் மீண்டும் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் ஆனந்தராஜ் கொடுத்த குழந்தை கடத்தல் புகாரில் சென்னையிலுள்ள பிக்பாஸ் வீட்டில் வனிதாவை விசாரிப்பதற்கு தெலங்கானா போலீஸார் வந்தனர். சென்னை நசரத்பேட்டை போலீசாரின் உதவியுடன் தெலங்கானா போலீஸாரின் விசாரணை நடைபெற்றது.
அப்போது, மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? என்பதைப் பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தாய் வனிதாவுடனே இருப்பதாக மகள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதை அடுத்து, வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்தராஜ் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.