சென்னை:
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மைதான் என்று கூறினார் டாக்டர் சுதா சேஷய்யன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நன்றாக நடமாடினார், இட்லி சாப்பிட்டார், நர்சுகளுடன் கலகலப்பாக உரையாடினார் என்றெல்லாம் அப்பலோ மருத்துவமனையில் இருந்து அறிக்கைகளாக வந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஜெயலலிதா மரணம் அடைந்ததாக வெளியான தகவலால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மக்களிடம் உள்ள சந்தேகத்தைப் போக்கும் விதமாக சுமார் 2 மாதங்கள் கழித்து திடீரென ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இது அப்பலோ நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அப்பலோ மருத்துவரும், இதனை ஏற்பாடு செய்துள்ளது அரசுத் தரப்பு என்று இந்த சந்திப்பில் கலந்து கொண்டவரும் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்தவருமான லண்டன் டாக்டர் பீலேவும் கூறினர்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட டாக்டர் சுதா சேஷையன் கூறியபோது…
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது என்பது உண்மைதான். நான் அப்போது அங்கிருந்தேன். டிசம்பர் 5–ந் தேதி இரவு 12.20 மணி அளவில் பதப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியது. அது 15 நிமிடங்கள் நீடித்தது. பொதுவாக முக்கியநபர்கள் இறந்துவிட்டால் அவரது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வெளியே வைப்பார்கள். அப்படி வெளியே வைக்கும்போது நமது சீதோஷ்ண நிலையில் அந்த உடல் கெட்டுப்போக வாய்ப்பு அதிகம்.
மேலும் பலரும் வந்து அவரது உடலை சுற்றி வருவார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்களிடம் இருந்து வரும் தூசி போன்றவற்றால் உடல் மேலும் கெடக்கூடிய சூழ்நிலை வரும். அதை தவிர்ப்பதற்காகத்தான் உடல் பதப்படுத்தப்பட்டது. இது பெரியவர்கள் மரணத்தின் போது இயல்பாக செய்யக்கூடியதுதான். அதுதான் ஜெயலலிதாவின் சாவிலும் நடந்தது.
எம்.ஜி.ஆரின் உடலும் பதப்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் உடலை பதப்படுத்திய அதே எம்.எம்.சி. அனாட்டமி பிரிவினர்தான் ஜெயலலிதாவின் உடலையும் பதப்படுத்தினார்கள். ஆனாலும் ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியபோது அவரது முகத்தில் நான் எந்த துவாரத்தையும் பார்க்கவில்லை.
எக்கிமோட்டிக் புள்ளிகள் என்ற படுக்கையில் நீண்ட நாட்கள் இருப்பவர்களுக்கு நேரிடும் நிற இழப்பு நிலைதான் ஜெயலலிதாவுக்கு இருந்தது. மற்ற எல்லா உடலுக்கும் செய்வதைப் போல சாதாரண பதப்படுத்தல்தான் ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டது. அவரது முகத்தில் காணப்பட்ட புள்ளிகள் சாதாரணமானதுதான். ஆழமானது அல்ல. அவரது உதடுகள் மட்டும் தடித்திருந்தன. டிரக்கியாஸ்டமியில் வென்டிலேட்டர் போடும்போது உதடு தடிப்பது இயல்புதான். பொதுவாக பதப்படுத்தும்போது ஐந்தரை லிட்டர் ரசாயன திரவம் உடலுக்குள் செலுத்தப்படும். அது உடலுக்குள் இருக்கும் ரத்தத்துக்கு பதிலாக போய் இருந்துகொள்ளும்.
திசுக்கள் ஒருவேளை கெட்டுப்போய் இருந்தால் அந்த பகுதியில் மட்டும் அந்த திரவம் கசிந்து வெளியேறும். ஆனால் ஜெயலலிதாவின் உடலுக்கு அப்படிப்பட்ட நிலை ஏற்படவில்லை. பத்திரிகையாளர் கூறுவதைப்போல, முகத்தில் புள்ளிகள், ஓட்டைகள் இருந்திருந்தால், அதன் வழியாக திரவம் கசிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. தானியங்கி எந்திரம் மூலமாகத்தான் திரவத்தை உடலுக்குள் ஏற்றினோம். அவ்வளவு வேகத்தில் ஏற்றும்போது, எந்த இடத்திலும் இயல்புக்கு மாறான திரவ கசிவு இருக்கவே இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் இயல்பான நிலைதான் இருந்தது. எனவே தேவையற்ற ஓட்டைகள், வெட்டி ஒட்ட வைக்கும் சம்பவம் எதுவும் ஜெயலலிதாவின் உடலுக்கு செய்யப்படவில்லை – என்று அவர் கூறினார்.
முன்னர், அவர் உடல் எம்பால்மிங் செய்யப் படவில்லை என்று அப்பலோ தரப்பில் கூறப்பட்டது.