
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறிய வட்டாட்சியர் உள்ளிட்ட ஏழு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரம் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் விவசாய பயன்பட்டிற்கு களிமண் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு புகார் கிடைத்துள்ளதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் தனி குழு மூலமாக அப்பகுதியில் நடத்திய ஆய்வில் அங்கு பெரிய அளவில் கனிமவள கொள்ளை நடந்துள்ளதும்,
அதற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கனிம வள கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் 4 வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட 7 அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.