
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்து தற்போது அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்கள் கோட்டைமேடு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 20 முதல் 30 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டு தற்போது வரை கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது .
சுமார் 10,000 மேற்பட்ட நெல் மூட்டைகளாகவும் குவியல்களாகவும் கொள்முதல் நிலையங்களில் வெட்ட வெளியில் கொட்டி கிடப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நெல் மூட்டைகள் மற்றும் நெற்குவியல்கள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமடைந்து வருகிறது .
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாகி பின்பு பகலில் வெயில் அடிக்கும் போது நெல் மூட்டைகளின் சாக்குகள் தேய்ந்து மூடைகளில் உள்ள நெல்கள் வெளியில் கொட்டியும் சிதறியும் அழுகியம் காணப்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, இந்த பகுதி விவசாயிகள் கூறுகையில் ,
கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து கொட்டி உள்ளோம் பல விவசாயிகளின் நெல்கள் மூடைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. சிலருக்கு சாக்கு வரவில்லை எனக்கூறி நெல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தை நடத்துபவர்கள் யார் என்று விவசாயிகள் ஆகிய எங்களுக்கு தெரியவில்லை நெல்களை கொள்முதல் செய்ய எந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரமும் தெரியாததால் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக நெல்களை காவல் காத்து வருகிறோம்.
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் மழையில் நனைந்து அழுகியும் வருகிறது மேலும் இரவு மழை பெய்து பகலில் வெயில் அடிக்கும் போது நெல் மூட்டைகள் காய்ந்து உள்ளே இருக்கும் நெல்கள் வெளியே கொட்டி கிடப்பதை பார்க்கையில் விவசாயிகளின் கண்களில் கண்ணீர் வருகிறது என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் 20 நாட்களாக தினசரி நெல்களை உலர்த்தி காய வைத்தும் மூடைகளை புரட்டி மாற்று இடத்தில் வைத்தும் வேலையை செய்து வருகிறோம்.
தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதை காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது தேர்தலும் முடிந்து விட்டது. நெல்லை கொள்முதல் செய்வதற்கு வழியில்லை.
ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்று முதல் நான்கு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகையால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மற்றும் நெல் குவியல்களை குடோன்களுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறோம் – இவ்வாறு கூறினர்.



