புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தில்லி சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்த ஆம் ஆத்மி கட்சியில் இப்போது உட்கட்சிப் பூசல் பூதாகாரமாக வெடித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்நிலையில், கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம், சனிக்கிழமை இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் , “உள்கட்சி ஜனநாயகம், வெளிப்படையான தன்மை, தொண்டர்களை மதித்தல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சி என கருதப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, இன்று பிற கட்சிகளால் கேள்வி கேட்கப்படுகிற நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரசுடன் இணைத்து வைத்து ஆம் ஆத்மியும் பார்க்கப்படுவது வேதனை அளிக்கிறது” என்றனர். மேலும், கட்சிக்கு ரூ.2 கோடி நிதி வந்த விவகாரம் குறித்து லோக்பால் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினோம். காங்கிரஸ் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சி அமைக்க முயற்சித்த பிரச்னை, மதுபானங்கள் பறிமுதல் செய்த பிரச்னை ஆகியவற்றை எழுப்பினோம். இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நாங்கள் கேஜ்ரிவாலுக்கு எதிரானவர்கள் என்று எங்களைக் கூறுகின்றனர். கட்சி, பழைய பாதைக்கு திரும்ப வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். பிற கட்சிகளின் பாதையில் ஆம் ஆத்மி செல்லக்கூடாது” என்றனர். கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுவதாகக் கூறிய பிரசாந்த் பூஷண் “நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. அதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்தது. இது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது” என்றார். இவ்வாறு குழப்பமான சூழ்நிலையில் இன்று அக்கட்சியின் தேசியக் கவுன்சில் கூடுகிறது.
ஆம் ஆத்மி தேசிய கவுன்சில் இன்று கூடுகிறது: பூஷண், யாதவ் நீக்கப்படலாம்!

செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

