இந்த காரை எந்த நிறத்தில் சேர்ப்பது |
கார்களின் நிறத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் உண்டா..? என்றால் உண்டு..! என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்காக 20 வருடங்களாக 8,50,000 விபத்துக்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை தந்திருக்கிறார்கள். இது விஞ்ஞான முறையில் நிரூபிக்க படாவிட்டாலும் 20 வருட ஆய்வு ரீதியாக உண்மை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது ஊரில் டிராவல்ஸ் கார்கள் எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெண்மை நிறம் சூரிய ஒளியை கிரகித்துக்கொள்ளாது. திருப்பி அனுப்பிவிடும். இதனால் வெயிலின் தாக்கம் காருக்குள் குறைவாக இருக்கும். ஏ.சி.யின் குளுமை நன்றாக இருக்கும். இதனால் எரிபொருள் செலவு குறையும்.
மற்றொன்று நமது சாலைகள் எல்லாமே கருப்பு. அதில் வெள்ளை நிறத்தில் வரும் கார் ‘பளிச்’சென்று எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கு தெரியும். இதனால் வெண்மைக் கார்கள் பாதுகாப்பானவை. விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு குறைவு என்கிறது அந்த ஆய்வு. இந்த காரணங்களினால் தான் வாடகைக் கார்கள் பெரும்பாலும் வெள்ளை நிறமாகவே இருக்கிறது.
கருப்பு நிறம் உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு வண்ணம். கார்களில்தான் மனிதர்களில் அல்ல. இளைஞர்கள் எப்போதும் கருப்பு நிறக் காரையே விரும்புகிறார்கள். ஆனால், கருப்பு விபத்தை ஏற்படுத்தும் நிறம் என்கிறது ஆய்வு. அவர்கள் ஆராய்ந்த 8 லட்சத்து 50 ஆயிரம் விபத்துக்களில் 47% கருப்பு நிறக் கார்கள். அதனால் இந்த நிறத்தை ‘பாதுகாப்பற்ற நிறம்’ என்கிறார்கள்.
‘பாதுகாப்பற்ற நிறம்’ |
கருப்பு நிறக் காரில் பயணிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டும். சாலையின் நிறமும் கருப்பு என்பதால் எதிரில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு தெரியாது. அதிலும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். இந்த நேரங்களில்தான் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வு கூறுகிறது. அதனால் கருப்பு, கிரே போன்ற அடர் வண்ணங்களில் கார் வைத்திருப்பவர்கள். லேசாக இருட்டியதுமே ‘பார்க் லாம்ப்’ போட்டுக் கொள்வது பாதுகாப்பு.
இந்த ஆய்வு பாதுகாப்பான நிறம் என்று மூன்று வண்ணங்களை சொல்கிறது. வெள்ளை, பொன்னிறம், மஞ்சள் என்பதுதான் அது. இந்த நிறக் கார்கள் வெறும் 3 % தான் விபத்தில் சிக்கியுள்ளதாம். ஆக, புதிதாக கார் வாங்கப் போகும் நண்பர்கள் இதை கவனத்தில் கொள்ளவது நல்லது.
மேலும் அந்த ஆய்வு சிவப்பு நிறக் கார்களை விட நீல நிறக் கார்கள் அதிகம் விபத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கிறது. அடர் பச்சை நிறத்தில் இருக்கும் கார்களுக்கு இன்னொரு பிரச்னை இருக்கிறது. மேலே பறக்கும் பறவைகள் இவற்றை மரம் என்று நினைத்து வந்து அமர்கின்றன. எச்சம் இடுகின்றன. பறவைகள் அதிகமாக எச்சம் இடுவது இந்த நிறக் காரில்தான்.
மஞ்சள் நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் எப்போதும் கார் கண்ணாடிகளை இறக்கிவிடக் கூடாது என்கிறார்கள். பூந்தோட்டம் என்று நினைத்து தேனீக்களும் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் இந்த கார்களை சூழ்ந்து கொள்கின்றனவாம். கண்ணாடி திறந்திருந்தால் உள்ளே புகுந்து கொட்டிவிடும் என்கிறார்கள்.
வெளிர்நீல நிறத்தில் கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்னொரு பிரச்னை உண்டு. பறவையின் கண்களுக்கு இந்த கார் சிறிய நீர்த்தேக்கம் போல் தெரியுமாம். அதனால் பறவைகள் இந்த காரை தேடி வந்து மோதி அடிபட வாய்ப்பு உண்டு.
ஆபத்தான நிறம் என்று சொல்லப் படும் கருப்பு நிறக் கார்கள் கூட சில நாடுகளில் பாதுகாப்பானவையாக இருக்கின்றன. எப்போதும் பனி சூழ்ந்து காணப்படும் குளிர் நாடுகளில் கருப்பு நிறம்தான் பாதுகாப்பானது. வெண்மை நிற பனியில் கறுப்புக் கார் பளிச்சென்று தெரியும்.
நம்மூரை பொறுத்தவரை வெள்ளை நிற கார்களே பாதுகாப்பானவை. அடர் நிற கார்களைவிட வெள்ளை நிற கார்களில் அழுக்கு குறைவாகவே தெரியும். கீறல் விழுந்தால் கூட பளிச்சென்று தெரியாது. அதனால் நமக்கு ஏற்ற வண்ணம் வெண்மைதான்.







