
தமிழகத்தில் இஸ்லாமிய மத பயங்கரவாதச் செயலை கண்காணிக்காமல் இருக்கும் தமிழக உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
1998 ஆம் ஆண்டு அல் -உம்மா பயங்கரவாதிகளால், கோவையில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து 58 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளிகளை கடந்த வாரம் முதல் தமிழக பயங்கரவாத தடுப்பு போலீசார்(ATS) கைது செய்து வருகின்றனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடமிருந்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது .
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளான அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தந்துள்ளனர்.
அதில் அவன், அல்-உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா தங்கள் ஊரான நாகப்பட்டினத்திற்கு வந்து ரகசிய கூட்டங்கள் நடத்தி போலீஸாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்ற வித்தைகளை கற்றுக் கொடுத்தார் எனக் கூறி இருப்பதும்,
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபோதும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு வெடி மருந்துகள் வாங்க இரண்டு முறை வந்ததாகவும் தெரிவித்து இருப்பது, தமிழ் உளவுத்துறை செயலிழந்து இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தேடப்படும் பயங்கரவாதிகளான இவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வந்து வெடி பொருட்களுக்கான மருந்துகள் வாங்கிய போது தமிழக உளவுத்துறை உறக்கத்தில் இருந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? இவர்கள் வெடி மருந்துகள் வாங்கி மீண்டும் ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சி செய்தார்களா? என்பதை பற்றி தமிழக காவல்துறை, இவர்கள் பிடிபடும் வரை கண்டுகொள்ளவில்லையா? என்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது .
பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பெற்ற இவர்கள் தமிழகத்தில் நாச வேலைக்கு சதி செய்துள்ளனர். அது மட்டுமல்லாது இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், பாஜக நிர்வாகி அரவிந்த ரெட்டி ஆகியோரை படுகொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூவரும் அபூபக்கரிடம் பயிற்சி பெற்றவர்களாக அவன் சொன்ன வேலையை செய்து முடித்துள்ளனர். பல படுகொலைகளுக்கு இவன் மூளையாக செயல்பட்டுள்ளான்.
இந்து முன்னணி வெள்ளையப்பன், பாடி சுரேஷ், பாஜகவின் அரவிந்த் ரெட்டி ஆகியோர் ஜிகாதிகளால் கொலை செய்யப்பட்ட பொழுதே இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய பயங்கரவாத சதி இருக்கிறது என்று இந்து முன்னணி தெரிவித்தது.
உடனடியாக தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது.
ஆனால் அதனை அலட்சியப்படுத்திய காவல்துறை உயர் அதிகாரி ராமானுஜம் அவர்கள், ஒவ்வொரு கொலைக்கும் வேறு வேறு பொய்யான காரணங்களைச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டார்.
காவல்துறையின் அலட்சியப் போக்கால் துணிச்சல் பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர் கொலைகளில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் பண முதலைகளாக மாறி உள்ளதைக் கூட அறியாதவர்களாக உளவுத்துறை இருந்திருக்கிறது.
தற்போது பிடிபட்டிருக்கும் அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோருக்கு பயிற்சி தந்த கொடூரன் பாஷா இறந்தபோது பல்வேறு அரசியல் கட்சியினர் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பயங்கரவாதி பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், இந்த பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுகிறது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பயங்கரவாதி பாஷாவை அப்பா என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது அபூபக்கர் சித்திக்கின் தூண்டுதலால் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற கொடிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என சீமான் குரல் கொடுக்கிறார்.
அப்படி என்றால் பயங்கரவாதிகளுக்கும் சீமானுக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் தீர விசாரிக்க வேண்டும்.
மத்திய அரசின் மூலம் தகவல் பெற்று பயங்கரவாத தடுப்பு போலீஸார் இவர்களை பிடித்துள்ளனர். ஏ. டி .எஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பு தமிழக உளவுத்துறையும், காவல்துறையும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அறியாமல் இருந்ததே பல படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இவர்கள் எங்கிருந்து, எதற்காக வெடி மருந்துகள் வாங்கினார்கள், இன்னும் என்னென்ன சதி செயலுக்கு திட்டம் தீட்டி இருந்தார்கள் என்பது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்.
அது மட்டுமன்றி இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும், பண உதவி செய்தவர்களையும், இந்த பயங்கரவாதிகளின் உறவினர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!





