
இதுபோன்ற கையாலாகாத ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கை :
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான திரு. பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருக்கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து விரோதமும் கோயில் பராமரிப்பில் மெத்தனமுமே காரணம் என்று அறிக்கையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு இரவுக் காவலர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலிலேயே இப்படி ஒரு கொடூரக் குற்றம் நிகழ்ந்துள்ளது, ஏட்டளவில் கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில், கோவில் சிலைகள் சேதத்தில் தொடங்கி உயிரைப் பறித்து கோவில் உண்டியல் பணத்தைத் திருடும் துணிகரம் வரை தொடர்ந்து நடந்து வருவதைப் பார்க்கையில், திமுக அரசின் தொடர் இந்து விரோதமும், கோவில் பராமரிப்பில் காட்டும் மெத்தனமும் தான் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மக்களின் மதநம்பிக்கைகளையும் சட்டம் ஒழுங்கையும் ஒரு சேரத் தாக்கிய இந்தக் கொடூரக் குற்ற வழக்கில், வழக்கம் போல கண்துடைப்பு விசாரணையில் ஏவல்துறை ஈடுபடக்கூடாது. மேலும், கோவில் பணத்தைக் களவாட அப்பாவி உயிர்களைக் காவு வாங்கிய கயவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.





