திரைப்படக் காதல் – பாகம் 2

Published:

65 ஆண்டுகளுக்கு முன்னர்.. தொடர்ச்சி!

திரைப்படக் காதல்! – பாகம் 2

அந்த நாட்களில் பாட்டுக்குப் பாட்டு எதிர்ப் பாட்டுப் போட்டுப் பாடி, நடித்து நாடக மேடை ரசிகர்களை உசுப்பேற்றி வெற்றி கண்டவர்கள் எஸ்.ஜி. கிட்டப்பாவும் கே.பி.சுந்தராம்பாளும். நடிப்பினாலும் உரத்த, உச்ச குரலின் பாட்டுத் திறனாலும் ரசிகர்களைக் கட்டுண்டு வைத்தனர். கிட்டப்பா-சுந்தராம்பாள் ஜோடிகள் பிறகு வாழ்க்கையிலும் ஒன்றுபட்டனர்! மேடைகளை அதிர வைத்தவர்கள் ஆதர்ச ஜோடிகளாகி, இல்லறத்திலும் இணைந்தனர்!

எஸ்.ஜி.கிட்டப்பா 1933ல், இளமைப் பருவத்தில், 28வது வயதில் காலமானார். கலை உலகிற்கு அது ஒரு பேரிழப்பு! கணவர் நினைவாகவே கைம்பெண்ணாக சுந்தராம்பாள் வாழ்ந்தாலும் படங்களில் யாருடனும் கூடி நடிப்பதைத் தவிர்த்தார். எனினும் தனது இனிய குரல் வளத்தை எங்கும் எதிரொலிக்கச் செய்தார்!

தமிழ்ப் படவுலகின் முதல் பெண் தயாரிப்பாளர், இயக்குநர் டி.பி.ராஜலட்சுமி. இவர் ஏழு வயதில் பால்ய விவாகம் செய்து கணவரையும் இழந்தவர். 11 வயதில் நாடகங்களில் நடித்தவர். முதல் தமிழ்ப் பேசும் படமான “காளிதாஸ்” படத்தின் நாயகி! இந்தப் படத்தில் இடம்பெற்ற வள்ளி திருமணத்தில் நாரதராக நடித்த சுந்தரத்தைத் திருமணம்
செய்துகொண்டார். இவருக்குப் பிறகு வந்த படங்களில் நடித்த பல ஜோடிகள் வாழ்க்கையிலும் ஒருங்கிணைந்தனர்.

திரையில் கூடி நடித்தவர்கள் பின்னர் இல்லற வாழ்க்கையிலும் ஒன்றுபட்டவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலர்:

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

எம்ஜிஆர் – வி. என். ஜானகி
பி. யு. சின்னப்பா – ஏ. சகுந்தலா
எம். கே. ராதா – ஞானாம்பாள்
ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி, சாவித்திரி
என். எஸ்.கிருஷ்ணன் – டி ஏ. மதுரம்
கே. ஏ. தங்கவேலு – எம். சரோஜா
எஸ். எஸ். ராஜேந்திரன் – விஜயகுமாரி
ஏவி எம். ராஜன் – புஷ்பலதா
சரத்குமார் – ராதிகா
ராமராஜன் – நளினி
பார்த்திபன் – சீதா
பாக்கியராஜ் – பூர்ணிமா
சுந்தர் சி – குஷ்பு
டி.ராஜேந்தர் – உஷா
லட்சுமி – மோகன், சிவசந்திரன்
சரத்பாபு – ரமாப்பிரபா
கமலஹாசன் – சரிகா, கவுதமி
சூர்யா – ஜோதிகா
விஜயகுமார் – மஞ்சுளா
வெண்ணிற ஆடை மூர்த்தி-மணிமாலா
அஜீத் – ஷாலினி
தனுஷ் – ஐஸ்வர்யா
ஹேமமாலினி – தர்மேந்திரா
அமலா – நாகார்ஜுன்

இவர்களைப் போல் இன்னும் பலர் படவுலகில் கொண்ட உறவை வாழ்க்கையிலும் கூடித் தொடர்ந்தனர். நடிகர்கள் மட்டுமல்ல, சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்களும்கூட திரை உலகில் கொண்ட தொடர்புகளைத் தங்கள் இல் வாழ்க்கையுடனும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்!

சுகாசினி-மணிரத்னம், சுகுமாரி-பீம்சிங், எஸ்.வரலட்சுமி-ஏ.எல்.சீனிவாசன், ராமண்ணா-இ.வி.சரோஜா, சித்ரா கிருஷ்ணசாமி- யோக, மங்களம் சகோதரிகள், குகநாதன் – ஜெயா, டி.ஆர்.சுந்தரம்-கேஎல்வி வசந்தா, பானுமதி-ராமகிருஷ்ணா, அஞ்சலி தேவி-ஆதி நாராயணராவ்….. இவர்களெல்லாம் படத் தொடர்புடன் நின்றுவிடவில்லை. இல்வாழ்க்கையிலும் இணைந்து இன்பரச கீதங்களை மீட்டனர்!.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

அந்த நாட்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரியின் திரைப் பட ஆதர்சக் காதலை நிஜ வாழ்க்கையுடன் இணைத்து ஒரு சிறுகதை எழுதி இந்தியன் மூவி நியூசில் வெளியிட்டேன். அதைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தக் கதை ஜெமினி கணேசன் – சாவித்திரியின் காதல் உறவு பற்றிய கதை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதை நிரூபிப்பதுபோல் ஜெமினி-சாவித்திரி கூடி இருக்கும்
படக் காட்சியையும் கதையுடன் வெளியிட்டிருந்ததால் மாட்டிக்கொண்டேன். அந்தச் சமயம் ஜெமினி கணேசன் – சாவித்திரி சிங்கப்பூருக்கு வந்தபோது எங்கள் அலுவலகத்திற்கும் வந்தனர். அந்தக் கதையை வெளியிட்டது பற்றி ஜெமினி கணேசனிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று என் மேல் அதிகாரியான மேனன் கேட்டுக் கொண்டார்.

ஜெமினி கணேசனை ஏற்கனவே சென்னையில் சந்தித்திருப்பதால் அவர் வந்ததும் உற்சாகமுடன் ஆங்கிலத்தில் என்னிடம் உரையாடினார். “நான் கதையைப் படித்தேன். நீங்கள் கற்பனை செய்ததுபோல் நிறைவேறாத காதல் அல்ல. நிஜமாகவே சாவித்திரியும் நானும் திருமணம் செய்ய முடிவுசெய்திருக்கிறோம்” எனக்கூறி அனைவரையும் வியப்படைய வைத்தார்!

“சார், உங்களுக்குத் தேவையான சாவித்திரியும் நானும் நடிக்கும் படங்கள், செய்திகளுக்கு என்னிடம் தொடர்புகொள்ளுங்கள். நான் அனுப்பி வைக்கிறேன்!” என்றார்.

1950ல் மருதநாட்டு இளவரசியில் இணைந்து நடிக்கும்போது எம்ஜிஆர்-வி. என்.ஜானகி காதல் மலர்ந்தது. இல்லறம் ஏற்றனர்!

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கலைவாணர் கிருஷ்ணன் 1931ல் நாகம்மையை மணம் செய்தார். “வசந்தசேனா” படப்பிடிப்பின்போது, கூட நடித்த மதுரத்துடன் கொண்ட மயக்கம் இல்லறத்துடன் இணைத்தது! அதனுடன் விடவில்லை. மதுரத்தின் தங்கை வேம்புவை மூன்றாந்தாரமாக வரித்துக்கொண்டார்!
6 பிள்ளைகளுக்கும் வாரிசானார்!

நகைச்சுவை மன்னர் கிருஷ்ணன் 30-8-1957ல் 49 வயதில் காலமாகவே டி.ஏ.மதுரம் சிங்கப்பூர்-மலேசியாப் பயணம் மேற்கொண்டு வந்தார். அவருக்குச் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் நான் ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். நிதி வசூலித்து மதுரத்திடம் வழங்கினோம்!

“அறுவடை காலத்தில் எலிக்கு எட்டுப் பெண்டாட்டிகள்!” என்று ஒரு பழமொழி இருக்கிறது. திரைப் படப் புகழ் இருக்கும்போது ஒட்டிகொண்டு குடும்பம் தொடங்கியவர்கள் பிறகு அம்போ என்று கைவிட்டுப்போன கிசுகிசுக் கதைகளை இன்னும் தொடரத்தான் வேண்டுமா? இதோடு முடித்துக்கொள்கிறேன்!

எழுத்து – சிங்கப்பூர் சர்மா (2-1-2018)

Related articles

Recent articles

spot_img