சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள் 2031 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், அதனை கடலில் விழச் செய்து அழிக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு சொந்தமான சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 1998- இல் தொடங்கப்பட்டது.
239 அடி நீளமும், 357 அடி அகலமும் கொண்ட இந்த விண்வெளி நிலையம் 400 கிமீ உயரத்தில் கடந்த 22 வருடங்களாக பூமியைச் சுற்றி வருகிறது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஏராளமான விண்வெளி வீரர்கள் இதில் பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்துள்ளனர்.
விண்வெளியிலே உயிரியல், இயற்பியல், எரி நட்சத்திரங்கள், மருந்து, உணவு பொருட்கள் தயாரிப்பு, உலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி இங்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக லோ எர்த் ஆர்பிட்டில் அதாவது பூமியின் தாழ் வட்டப் பாதையில் வினாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வட்டமிட்டு வருகின்றது.
இந்த நொடி வரை மனித நாகரிகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் சில அதி நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைவதற்கு இந்த ஆய்வகம் உதவி வருகின்றது.
2024 வரை சர்வதேச விண்வெளி நிலையம் இயக்கப்பட்ட அதன்பிறகு இதனை அழிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதன் ஆயுட்காலம் 2031 வரை நீட்டிக்கப்படும் என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
அடுத்த 9 ஆண்டுகளில் இதில் நடத்தப்படவுள்ள ஆய்வுகள் பற்றியும்,2031- ல் இதனை செயலிழக்க செய்து கடலில் விழச் செய்யும் முறை பற்றியும் நாசா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தெற்கு பசிபிக் பெருங்கடலில் பாயிண்ட் நெமோ என்ற மனிதர்களே இல்லாத பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இதை 2031 ஆம் ஆண்டு விழ செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பூமியின் வளி மண்டலத்திற்குள் சர்வதேச விண்வெளி நிலையம் நுழையும்போதே அதிக வெப்பத்தின் விளைவாக எரிந்து உடைந்து அதன் பெரும்பகுதி அழிந்து விடும். ஆனால் ஒரு சில வலுவான பாகங்கள் கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீனா ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
2031 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் புதிய சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.