தூத்துக்குடியில் மோசமான வானிலை காரணமாக பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட இரண்டு இண்டிகோ விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது:
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையினால் தூத்துக்குடியில் இறங்க வேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் மதுரையில் தரை இறங்கியது.
இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் 66 பயணிகளுடன் புறப்பட்டது. சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, கன்னியாகுமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால், தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் 66 பயணிகளுடன் பகல் 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தொடர்ந்து, மோசமான வானிலை நீடித்து வருவதால் ஒரு சில பயணிகள் சாலை மார்க்கமாக தூத்துக்குடி செல்ல புறப்பட்டு சென்றனர். மீதமுள்ள பயணிகள் வானிலை சரியான பின் விமானம் இயக்கப்படும் என்று இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளதால், ஒரு சில பயணிகள் காத்திருந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக பெங்களூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானமும் வானிலை மோசமாக உள்ளதால், மதுரையில் தரையிறங்கிஉள்ளது.
தூத்துக்குடியில் வானிலை சரியான உடன் இரண்டு விமானங்களும் மதுரையில் இருந்து தூத்துக்குடி புறப்படும் என, இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறினார்.
மதுரை மாவட்டத்தில், கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை அருகே சோழவந்தான், சமயநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, மேலூர், அழகர்கோவில், கருப்பாயூரணி, மதுரை நகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை அதிக குளிர் இருந்தது!