என்னிடமிருந்து ஒரு பெண் திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்று இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்தாராம். எல்லாம் மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடந்த கூத்துதான்! போலீஸார் அதற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள்?!
மராட்டிய மாநிலம் நாகபுரியில், கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 82
லட்சம் மதிப்புள்ள பொருட்களை
உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியை போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருட்டு வழக்குகள் குறித்து பேட்டி அளித்தார் நாகபுரி காவல் ஆணையர் பூஷண் குமார் உபாத்யாய.
அப்போது அவர் ஒரு வித்தியாசமான திருட்டுப் புகார் குறித்தும் கூறி, செய்தியாளர்களை சிரிக்கவும் அசரவும் வைத்தார். திருடப்பட்ட
பொருட்களை நாங்கள் பெரும்பாலும் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம். ஆனால், எங்களால் தீர்வே காண முடியாத சில புகார்களையும் நாங்கள் பெற வேண்டியுள்ளது.
நாகபுரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விசித்திரமான புகாருடன் காவல் நிலையத்துக்கு வந்தார். அவர் அளித்த புகாரைக் கேட்டு போலீசாருக்கு தலையே சுற்றியது. தனது இதயத்தை பெண் ஒருவர் திருடிவிட்டார் என்றும், அதனைக் கண்டுபிடித்து தாருங்கள் என்றும் புகார் எழுதிக் கொடுத்தால், போலீசார் என்ன செய்ய முடியும்.
அவரது புகாரைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரிடம் அதெல்லாம் முடியாது என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால் சம்பந்தப் பட்ட நபர் விடாப்பிடியாக இருக்கவே, உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு என்ன செய்வது என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து, புகார் அளிக்க வந்த அந்த இளைஞரிடம் இப்படிப் பட்ட புகாரை பதிவு செய்வதற்கு இந்திய சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை எனக் கூறி, இந்த பிரச்னைக்கு எங்களிடம் தீர்வு இல்லை. திரும்பிச் செல்லுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தனர்… என்று கூறி, செய்தியாளர்களை சிரிக்கவும் யோசிக்கவும் வைத்துள்ளார்.