எச்சரிக்கை: இன்றைய செய்தி நாளைய வரலாறு! இன்னும் 10 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் கீழ்க்காணும் ‘கற்பனை’ச் செய்தி வரலாறாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப் பட்டால்… அதற்கு நாம் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டோம்! (பொறுப்புத் துறப்பு அறிவிப்பு!)
திமுக என்பது… ஏறத்தாழ 5 கோடி (????) உறுப்பினர்களைக் கொண்ட ஜனநாயக இயக்கம். அப்படிப்பட்ட மாபெரும் ஜனநாயக இயக்கத்திலே… துரைமுருகன், TR.பாலு, ஐ.பெரியசாமி, KN.நேரு உட்பட… 30 வயதுக்கும் கீழான (????) 1 கோடி இளைஞர்களைக் கொண்ட மாபெரும் இளைஞரணி செயல்படுகிறது.
கடந்த சிலநாட்களாக, திமுக இளைஞரணி செயலாளர் பதவி காலியாக உள்ளது. இதையறிந்த திமுக தொண்டர்கள்… இளைஞரணி செயலாளர் பதவிக்கு, திமுகவுக்காகவே தம் உடல், பொருள், ஆவி என்று அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்ட கடைக்கோடித் தொண்டன் தம்பி உதயநிதியை நியமிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராடினார்கள்.
இதைக் கேள்விப்பட்ட திமுக தலைவர் தளபதி ஸ்டாலின்… “வாரிசு அடிப்படையில் பதவி கொடுக்க… திமுக ஒன்றும் சங்கரமடமல்ல” என்று, வெகுண்டெழுந்தார். தன் தந்தையை போலவே, வாரிசு அடிப்படையில் பதவி கேட்கும் உடன் பிறப்புக்களை கண்டித்து, முரசொலியில் கடிதம் எழுதினார்.
“தலைவரே… எந்தக் காலத்தில், நம் கட்சியைப் போல சங்கரமடத்தில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுத்தார்கள் ?” என்று அப்பாவித்தனமாக கேட்டு பதில் கடிதம் எழுதிய தொண்டர் ஒருவர்… மண்டை உடைக்கப்பட்டு, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.
‘உதயநிதியை நியமித்தே ஆகவேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்து, நாளுக்கு நாள் திமுகவினரின் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து… இளைஞரணி செயலாளர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு நடத்த தளபதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மனுநீதிச் சோழன் வம்சத்தில் வந்த தன் மீது, ‘தன்மகன் என்பதற்காகவே, உதயநிதிக்கு… ஸ்டாலின் பதவி கொடுத்தான்’ என்று உலகம் பழி சொல்லி விடக்கூடாது… என்பதற்காகவே, தலைவர் இந்த நேர்முகத் தேர்வை நடத்தி, உதயநிதிக்கு பதவி கொடுப்பதை தவிர்க்கிறார்’ என்பதை திமுகவின் இளைஞரணியினர் புரிந்து கொண்டனர்.
உடனடியாக, “இளைஞரணிச் செயலாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வில், உதயநிதியைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக்கூடாது” என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
நேர்முகத் தேர்வுக்கான தேதியும் வந்தது. வேறு யாரும் நேர்முகத் தேர்வை நடத்தி, தகுதியும் திறமையும் உள்ள திமுக.,வின் கடைக் கோடித் தொண்டன் ஒருவன் வரவேண்டிய அப்பதவிக்கு, தவறான வழியில் உதயநிதி வந்து விடக்கூடாது என்பதில்… தளபதி ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.
தானே அந்தத் தேர்வை நடத்தினார். நேர்முகத் தேர்வில் உதயநிதியைத் தவிர வேறுயாரும் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்த தளபதி ஸ்டாலின்… எரிமலையாக வெடித்தார்.
கலைஞர் கற்றுக் கொடுத்த கட்சியின் ஜனநாயக மாண்பு அவரை கட்டிப்போட்டது. தலைவரின் முன்னால், உதயநிதி அமர வைக்கப்பட்டார்.
தளபதி ஸ்டாலின்… சிறிதும் ஈவிரக்கமின்றி, திராவகத்தில் தோய்த்த கேள்வி அம்புகளை, உதயநிதியை நோக்கி வீசினார்…
“உங்கள் பெயர் என்ன ?” … “உங்களின் வயது என்ன ?” … ‘நீங்கள் நடித்த படங்களின் பெயர் என்ன ?” … “உங்களுக்கு பிடித்த கதாநாயகியின் பெயர் என்ன ?”
தளபதி அவர்கள்… கடைசியாக தன் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார்!
“1-லிருந்து 10-வரைக்கும் சொல்லுங்கள்”…
உதயநிதி திகைத்தார். 1-லிருந்து வரிசையாக சொல்ல ஆரம்பித்து… ஒன்றிரண்டு எண்கள் விடுபட்டு தடுமாறியபோது, ஜன்னலருகில் நின்ற துரைமுருகன், ஜாடையின் மூலம் அதை சரிசெய்தார்.
எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கிய உதயநிதியை ஏறிட்டுப் பார்க்க முடியாத வேதனையில், மேசைக்கு அடியில் தான் கையில் வைத்திருந்த கேள்விகளுக்கான துண்டுச்சீட்டை கசக்கி எறிந்தார், தளபதி ஸ்டாலின்.
தன் தாத்தாவைப் போலவே, தன் தந்தையைப் போலவே… மாசற்ற ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்ற மனஆறுதலில், மேசைக்கு அடியில் தான் கையில் வைத்திருந்த, பதில்களுக்கான துண்டுச் சீட்டை மடித்து, பாக்கெட்டில் சொருகிக் கொண்டு வெளியில் வந்தார் உதயநிதி.
விழாக்கோலம் பூண்டது அறிவாலயம். தமிழகமே ஆர்ப்பரித்தது.
அறிவாலயத்தின் உள்ளே… “எவ்வளவோ முயற்சித்தும், என்னால் உதயநிதியை வெல்ல முடியவில்லை அண்ணே…” என்று துரைமுருகன் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் தளபதி ஸ்டாலின்.
தனக்கு புத்தம்புது தலைவன் கிடைத்த மகிழ்ச்சியில்… இளைஞரணியின் பழமையான தொண்டர் துரைமுருகன், தன் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “தம்பீ… நீங்க11-லிருந்து 20-வரைக்கும் சொல்லச் சொல்லி கேட்டிருந்தாலும் கூட, கலைஞர் வழிவந்த ஜனநாயக முறைப்படி… உதயநிதிதான் வெல்வார். காரணம்… அது ராயல் ப்ளெட்” என்றார்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞரும் கற்றுக்கொடுத்த சமூகநீதியை எண்ணி… பெரும் வியப்பில் ஆழ்ந்தார் தளபதி ஸ்டாலின் !!!
பின்குறிப்பு: வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் கற்பனைச் செய்தி! செய்தியை எழுதியவருக்கு நன்றி!