தனது குழந்தைக்கும் ஹெல்மெட் மாட்டிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் முன்னே நிற்க வைத்து அழைத்து வந்த பெண்ணின் வாகனத்தை நிறுத்தி, சற்று நேரம் பாராட்டிப் பேசி… குழந்தைக்குக் கை கொடுத்து, அந்தப் பெண்ணுக்கும் வாழ்த்து சொல்லி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளார் உ.பி. மாநில காவலர் ஒருவர்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவிலும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ராகுல் ஸ்ரீவத்ஸவ் என்ற காவலர்.
சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு குறித்து பல்வேறு பிரசாரங்களை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக, போக்குவரத்துப் பிரிவு போலீஸார் பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளையும் பிரசாரங்களையும் சாலைகளில் செய்து வருகிறார்கள்.
அவற்றையும் மீறி ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்ட் போடாமலும் என அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் சாலைகளில் செல்வோரே அதிகம். அவர்களை சில நேரங்களில் பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். சில நேரங்களில் முறைகேடுகளில் இறங்கி, விட்டு விடுகிறார்கள்.
இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் போட வேண்டும் என கட்டாயம் ஆக்கியுள்ளார்கள் சில மாநிலங்களில். ஆயினும் அதை பலரும் கடைப்பிடிப்பதில்லை,.
இந்நிலையில் தனது குழந்தைக்கும் சிறிய ஹெல்மெட் அணிவித்து, சாலையில் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த பெண்ணின் செயலைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போன உபி., மாநில போக்குவரத்து ஆய்வாளர் தியோரியா குழந்தைக்கும் தாய்க்கும் நடு சாலையில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை ராகுல் ஸ்ரீவத்ஸவ் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தக் குழந்தைக்கு பள்ளியில் பரிசும் பாராட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
Salute the lady’s concern for the safety of the child !
Also admirable is Traffic Inspector Deoria’s effort to engage them in a conversation, appreciate their concern for safety & promise to reward the child in her school. #RoadSafety #Helmet #HelmetForAll pic.twitter.com/ohNIqNI0a3— RAHUL SRIVASTAV (@upcoprahul) August 1, 2019