விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீவரதராச பெருமாள் கோயிலில் நடைபெற்று வந்த அத்திவரதர் பெருமான் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது! இதை அடுத்து, அத்திவரதரை தரிசிக்க, இன்று பொது தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
விஐபி., விவிஐபி, தரிசனங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு, எவரெல்லாம் விஐபி., விவிஐபி., பாஸ் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் அளித்து, அனைத்தையும் காலி செய்யும்படி மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டளை இட்டிருந்தார்களோ என்னவோ..! நேற்று பலருக்கும் விஐபி பாஸ் எளிதாகக் கிடைத்து, விரைவில் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிந்தது என்று பக்தர்கள் கூறினர்.
இந்நிலையில், நிறைவு நாளான இன்று, அத்திவரதர் பெருமானுக்கு மஞ்சள் – ரோஸ் நிற பட்டாடை சார்த்தப் பட்டு, அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. இன்று கடைசி ஆடி வெள்ளிக் கிழமை என்பதாலும் அன்பர்கள் அதிகம் குவிந்திருந்தனர். காலை 5.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
அத்திவரதரை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் தரிசித்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்றுடன் தரிசனம் நிறைவு பெறும் நிலையில், நாளை அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளுகிறார். இனி 2059-ல் தான் அத்திவரதர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.