திருச்சி, திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் திரு பவித்ர உத்ஸவம் எனப்படும் நூலிழைத் திருநாள் திங்கள் கிழமை நேற்று தொடங்கியது.
திருவரங்கம் திருக்கோயில் வைணவர்களின் தலைமைக் கோயிலாக போற்றப் படுகிறது. பூலோக வைகுண்டம் என போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உத்ஸவம் நேற்று தொடங்கியது. இதனை நூலிழைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.
ஒன்பது நாட்கள் நடைபெறும் பவித்ர உத்ஸவத்தின் போது, அனைத்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு நூலிழைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திரு பவித்ர உத்ஸவத்தின் தொடக்க நாளான நேற்று காலை 9.15க்கு திருவரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, யாகசாலை வந்தடைந்தார். அங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்த மலர்களுக்கு நடுவே நம் பெருமாள் எழுந்தருளினார்.
இரவு, 7 மணி அளவில் திருமஞ்சனம், அலங்காரம் கண்டருளிய நம்பெருமாள் இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
திருப்பவித்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் பூச்சாண்டி சேவை சாதிப்பார். அப்போது நம்பெருமாளின் திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள் சுருளாக வைத்து அலங்காரம் செய்வர்! இதனை பூச்சாண்டி சேவை என்கின்றனர்.