கடனாளியாக வந்தவர் ஒரு பயனாளியாக திரும்பிச் சென்றார்!

Published:

“கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத்.திரும்பிச் சென்றார்.”

“நீ ஒரு தண்ணீர்ப் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம், ‘சிவசிவ,ராம ராம’ன்னு சொல்லிண்டே “கடனைத் திருப்பிக் கொடுக்க முடியல்லே; தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சத்தமா சொல்லிண்டே – எல்லோருக்கும் தீர்த்தம் கொடு…உனக்கு நல்ல மனசு கடன்பட்ட பாவம் போயிடும்….”-பெரியவா.
.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மூன்று நாள்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார் அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும்.

பெரியவாள் மௌனம்.

நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார்கள் பெரியவாள்

அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர் ஓடோடி அருகில் வந்தார்.

“பெரியவாகிட்ட தனியா பேசணும்.ரெண்டே நிமிஷம்..”

“அதுக்காகத்தான் மூணுநாளா காத்திண்டிருந்தியோ?”

பக்தருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அது என்ன, அவ்வளவு கணக்காக மூன்றுநாள்? ரெண்டு-மூணு நாள் என்று சொல்லியிருக்கப்படாதோ?

“குடும்ப விஷயம்….ரகசியமாகப் பேசணும்…”

“என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்கு தெரிஞ்சதாலே ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாது…”

பக்தரின் முன்னோர்கள் செழிப்புடனும், செல்வாக்குடனும் இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், எப்படியோ தாங்கமுடியாத கஷ்டம், பொருள் நெருக்கடி வந்துவிட்டது தாத்தா காலத்தில் கடன் சுமையைத் தாங்க முடியாமல் போகவே, விளைநிலம் ஏலத்துக்குப் போயிற்று.

அப்படியும், கடன் கொடுத்தவர்களுக்கு முழுத் தொகையையும் செலுத்த முடியவில்லை .வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் பாவம் வந்து சேர்ந்து மனக்கஷ்டம் இரவு-பகலாய் துன்புறுத்துகிறது. என்னிடம் பணம் இல்லை. குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. தாத்தா காலத்துக் கடன்களையெல்லாம் அடைத்து விட்டால்தான் நிம்மதியும் சௌகரியமும் உண்டாகும் போலிருக்கிறது.

“பெரியவாதான் வழி சொல்லணும்…”

சிறிதுநேரம், கண்களை மூடிக்கொண்டிருந்தார்கள் பெரியவா.

“கோடை காலத்திலே, பல க்ஷேத்திரங்களில் உற்சவம் நடக்கும். ரொம்ப ஜனங்கள் வருவா. எல்லாருக்கும் ரொம்ப தாகம் இருக்கும். நீ ஒரு தண்ணீர்ப் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம், ‘சிவசிவ,ராம ராம’ன்னு சொல்லிண்டே “கடனைத் திருப்பிக் கொடுக்க முடியல்லே; தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சத்தமா சொல்லிண்டே – எல்லோருக்கும் தீர்த்தம் கொடு…உனக்கு நல்ல மனசு.. கடன்பட்ட பாவம் போயிடும்….”

விழுந்து விழுந்து சேவித்தார் பக்தர்.

கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத் திரும்பிச் சென்றார் 

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img