spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று வியாச பூஜை: குரு பூர்ணிமா! மகத்துவம் அறிவோமா?

இன்று வியாச பூஜை: குரு பூர்ணிமா! மகத்துவம் அறிவோமா?

- Advertisement -

கிருஷ்ணா ராமலிங்கம்

வியாச பூஜை என்பதும், சாதுர் மாஸ்ய விரதம் (சாதுர்யம் மாஸ்ய விரதம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமானது) சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி (இந்த வருடம்: 3.7.2023) அன்று வருவது. இதையே ‘குரு பவுர்ணமி’ என்றும் சொல்வர். எல்லோருக்குமே இந்த பவுர்ணமி உயர்ந்தது.

ஆஷாட பெளர்ணமியும் மூல நட்சத்திரம் சேர்ந்து வருவது விஷேசமான ஒரு நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது, அடுத்த ஆஷாட பெளர்ணமி மூல நட்சத்திரம் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் வருகிறது என்று இன்று வேத வகுப்பில் குருஜி மூலமாக தெரிய வந்தது.

குருப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரா, குரு சாட்சாத் பரப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குரவே நம:

தேஹிமே குரு ஸ்மரணம்
தேஹிமே குரு கீர்த்தனம்
தேஹிமே குரு தர்ஷணம்
தேஹிமே குரு ஸாமீப்யம்
தேஹிமே குரு பதஸேவனம்
தேஹிமே குரு உபதேசம்
தேஹிமே குரு ஸாயுஜ்யம்

குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

இந்த வியாச பூஜையை முதன் முதலில், துவக்கியவர், வேதவியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை மன்னர் பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான,
ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.

அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீசுகப்பிரம்ம ரிஷிக்கு ‘வியாச பூஜை’யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர்மாஸ்ய விரதம். ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆஷாட பவுர்ணமி – வியாச பவுர்ணமி என்ற நாளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டு ‘வியாஸ பூஜை’ நடத்துவது துறவிகளின் பணி.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது ஆதிசங்கர பகவத்பாதாள் தொடங்கி குரு பரம்பரையில் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மடங்களில் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள். .

இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது, இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலகநலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கமாகும்.

இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டு தோறும் சாதுர்மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு வியாச பூஜை என்ற பெயரில் நடைபெறுகிறது.

பராசரா முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேத வியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பதாகும். வேதம், மகாபாரதம் மற்றும் பதினெண் புராணங்களை அருளியவரும், வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தவர் இவர்தான்.

இந்து மதத்திற்கு ஆணிவேராக இவர் போற்றப்படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் பெயர் இதில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.

இந்த வியாச பூஜையில் வியாசர் அவரது நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதிசங்கரர் அவரது சீடர்களான பத்மபாதர், ஸுரேச்வர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோரும், மவுனகுருவின் சீடர்களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமார் ஆகியோரும் நாரதர், சுகர், கவுடபாதர், கோவிந்த பகவத் பாதர் ஆகிய குருமார்களும், கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப் படுகின்றன.

துறவிகளாலேயே செய்யப்படும் இந்த பூஜையானது முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்ராமமும் வைத்து எலுமிச்சம் பழத்தை ஆங்காங்கு வைத்து முறைப்படி ‘குருபரம்பரை ’ பூஜையாக நடத்தப்பெறுகிறது.

எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் துறவிகளுக்கு – சன்னியாசிகளுக்கு ‘பரிவ்ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பவுர்ணமி தொடங்கிக் கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரதகாலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர். மற்ற காலங்களில் பல பகுதிகளிலும் எப்போதும் யாத்திரையிலேயே இருந்து வருவர்.

மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையுமாதலின் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு இம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பர். நான்கு மாதங்கள் இவ்வாறு தங்கியிருக்கும் விரதமே ‘சாதுர் மாஸ்ய விரதம்’ எனப்படும். ஆனி மாதம் பவுர்ணமி முதல் இவ்விரதம் தொடங்குகிறது. இக்காலத்தில் வேத, வேதாந்த, உபநிஷத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வசிப்பார்கள்.

வியாச பூஜை தினத்தன்று, ஆதி குருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே, இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.

சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப் படுவது வழக்கம். சன்யாசிகள் மட்டுமல்லாமல், சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இன்றளவும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

இந்த நன்னாளில், ஆச்சாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, ‘தான்’ எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்.

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆச்சாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.

மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும். மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களில் சென்று வழிபாடு செய்தல் சிறந்தது. ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெறுவோம்!!!!!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe