‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..’-(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)

Published:

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..’-

(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)

(மதம் கடந்த கருணை பெரியவாளுக்கு)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும் இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் ஏராளம்.

1989-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி.

ஒரு முஸ்லீம் அன்பர்,தன்னுடைய மகனை- குலாம் தஸ்தகீர் – கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தார் ஸ்ரீ மடத்துக்கு. சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை நமஸ்கரித்தார்கள்.

‘என்னோட மகன்,வயலின் வாசிக்கிறான். ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான். பெரியவங்க ஆசி வேணும்…சாமிக்கு முன்னாலே வயலின் வாசிக்கணும்….’

அனுமதி கிடைத்ததும், பார்வையில்லாத குலாம் தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான். பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தார்கள்.

பின்னர், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து, ‘பையனுக்கு யாரிடம் சிட்சை’ என்றும் கேட்டறிந்தார்கள்.

தஸ்தகீரின் தகப்பனார்க்கு உணர்ச்சிபூர்வமான தவிப்பு, நெஞ்சு,கெஞ்சியது.

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..’ என்று சொல்லியே விட்டார்!.

தொண்டர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.இது என்ன பிரார்த்தனை? ஆசீர்வாதம் கேட்டால் போதாதோ?…

முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது.

பெரியவாள், ஒரு சிஷ்யருக்கு ஜாடைகாட்டி, அந்த வயலினை வாங்கிக்கொண்டு வரச் சொல்லி தன் அருட்கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள் 

.
பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய் உருகிப் போனார்கள்.

இரண்டு வேஷ்டிகளும்,மாம்பழங்களும் பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு  

Related articles

Recent articles

spot_img