
தென்காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்ட படி ஏப் 7இல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 15ம் நூற்றாண்டில் தென்காசி பகுதியை ஆண்ட பராக்கிரமபாண்டிய மன்னரால் வடக்கே கங்கை கரையில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் தெற்கில் உள்ளவர்களும் தரிசிக்கும் வண்ணம் தென்காசி சிற்றாற்றின் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டது.
இக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகா மண்டபம், பிரகார மண்டபம், புதிய கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் என பல்வேறு திருப்பணிகள் புனரமைக்கப்பெற்று ஏப்ரல் மாதம் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 3-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது.
கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. பக்தர்கள் தரிசனம் செய்து முடித்ததும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரி வழக்கு; நீதிமன்ற விசாரணையில்..
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் 14-ம் நூற்றாண்டில் மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. இந்தக் கோயிலில் 2006-ல் கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் கோயில் பகுதியில் நூறு டிராக்டருக்கும் அதிகமாக மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் கட்டிடம் உறுதியிழந்துள்ளது. இதையடுத்து கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாகச் செலவிடப்படவில்லை. அரசின் நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் உறுதித்தன்மையும் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்டபோது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் ஏப். 7-ல் நடைபெறுகிறது. ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது.
எனவே, கோயிலில் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் தடை விதித்தும், கோயில் புனரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், கோயில் புனரமைப்புப் பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், திருப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மனுவுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஏப்.3) தள்ளி வைத்துள்ளனர்.
திட்டமிட்ட படி ஏப் 3இல் நாளை யாகசாலை பூஜைகள் துவங்கி ஏப்ரல் 7இல் கும்பாபிஷேகம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.