திருவானைக்காவல் கோயில்களில் உள்ள சிற்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சிற்பங்களை ‘டிரோன் கேமரா’ மூலம் ஒளிப்பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
‘திருவனைக்காவல்’, ‘திருஆனைக்காவல்’ என்றெல்லாம் அழைக்கப்படும் ‘திருவானைக்கோவில்’, திருச்சியின் காவிரிக்கரையோரம் அமைந்துள்ளது.
இதனை ‘திருவானைக்காவல்’ என்றும் சிலர் ‘திருவானைக்கா’ என்றும் அழைக்கின்றனர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், தாயுமானவர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை ‘பாடல்கள் பல பெற்ற தலம்’ என்பார்கள்.
இக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ‘நீருக்கு’ உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-வது திருத்தலம் ஆகும்.
தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் உள்ள சொத்துகள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில்களின் சொத்துகள் மீட்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரப்படுகிறது.
கோயிலுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன, எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன, அதன் தற்போதைய மதிப்பு என்ன, என்று தமிழகம் முழுவதும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் பணிகள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்;
திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவு செய்யவேண்டும்;
திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்கள் விவரங்கள் பொதுமக்கள் இணையதளத்தில் பார்வையிடும் வகையில் ‘புவிசார் குறியீடு’ செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்;
கோயில்களின் பெயரில் உள்ள அசையும், அசையாச் சொத்துகளின் உரிமை மற்றும் ஆவணங்களையும், பிரதான சின்னங்களையும் சிற்பங்களையும் ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பெயரில், பழைமை வாய்ந்த ‘திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோவில்’ வளாகம் மற்றும் கற்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை டிரோன் கேமரா மூலமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை நேற்றிலிருந்து தொடங்கியுள்ளனர்.
இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைந்துவிடும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.