முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்
ஐ.சி.சி. டி20 போட்டி – 23.10.2021
குறைவான ஸ்கோர் ஆட்டங்கள்
திக்கித் திணறி வென்ற ஆஸ்திரேலியா
நேற்று, சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடந்தன. இரண்டும் “லோ ஸ்கோர்” ஆட்டங்கள். முதல் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இடையே நடந்தது, தென் ஆப்பிரிக்கா அணி சரியாக விளையாடவில்லை என்று சொன்னால் அது அந்த அணிக்கு ஒரு பாராட்டாக அமையும். அவ்வளவு மோசமான ஆட்டம். முதல் ஓவர் ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் பொடுகிறார்; மூன்றாவது பந்தில் ஒரு விக்கட் விழுகிறது. திக்கித் திணறி ஓடி வந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஒரு மட்டையாளர் ரன் அவுட்டாகிறார். மொத்த அணியும் இருபது ஓவரில் 118 ரன் எடுக்கிறது. எனவே தென் ஆப்பிரிக்கா அணி சரியாக விளையாடவில்லை என்று சொன்னால் அது அந்த அணிக்கு ஒரு பாராட்டாக அமையும்.
அடுத்து ஆடவந்த ஆஸ்திரேலியாவும் சரியாக ஆடவில்லை. ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ் ஆகியோர் வந்தார்கள்; போனார்கள். ஆஸ்திரேலியா கடைசி ஐந்து ஓவர்களில் 38 ரன் எடுக்கவேண்டியிருந்தது. இறுதியில் 19.4 ஓவரில் 121 ரன் எடுத்து முக்கி, முனகி, திக்கித் திணறி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் மகா மோசமான ஆட்டம்
அடுத்த ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே நடந்தது. முதலில் மே.இ.தீவுகள் அணி மட்டையாடியது. உனிவர்சல் பாஸ் கெயில், ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த பொலார்ட், அதிரடி ஆட்டக்காரர்கள் நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரூ ரசல், ஹெட்மையர் போன்ற வீரர்கள் உள்ள அணி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அனைத்து மட்டயாளர்களும் வானில் பறக்கும் பந்துகளால் சிக்சர், ஃபோர் அடிக்க முயன்று அவுட்டாகினர். அந்த அணியின் ஒரு வீரர்கூட நின்று ஆட முயற்சிக்கவில்லை. ஒரு பந்துக்கு ஒரு ரன் என்று ஆடியிருந்தால் கூட 120 ரன் அடித்திருக்கலாம். 56 ரன்களை இங்கிலாந்து அணி 8.2 ஓவரில் எளிதாக எடுத்தது. அந்த அணியின் நான்கு வீரர்கள் விக்கட் இழந்தனர்.
இன்று நடந்த குரூப் 1இல் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு நாளை இலங்கை-வங்கதேச அணிகளுக்கிடையேயான ஒரு ஆட்டமும், குரூப்2இல் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் ஆட்டமும் நடக்கவுள்ளது.