ஐபிஎல் 2022 – 2 ஏப்ரல் 2022 – இரண்டு போட்டிகள்
ராஜஸ்தான், குஜராத் அணிகள் தொடர் வெற்றி
– K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று ஏப்ரல் இரண்டாம் நாள் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் போட்டி மும்பையின் டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடந்தது. ஐ.பி.எல்லின் ஒன்பதாவது போட்டியான இதில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் மோதின. அடுத்த போட்டி புனேயில் நடந்தது. பத்தாவது ஐபிஎல் போட்டியான இதில் குஜராத் அணியும் டெல்லி அணியும் மோதின.
ராஜஸ்தான் vs மும்பை
டாஸ் வென்ற மும்பை அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா ராஜஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னார். பும்ராவின் ஒரு பிரமாதமான பந்தால் தொடக்க ஆட்டக்காரர் யசஷ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் ஜோஸ் பட்லர் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். பசில் தம்பி வீசிய நான்காவது ஓவரில் மூன்று சிகஸ், இரண்டு ஃபோர் அடித்தார். ஆனால் ஆறாவது ஓவரில் தேவதத் படிக்கல் (7 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சஞ்சு சாம்சனும் ஜோஸ் பட்லரும் இணைந்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை மிக வேகமாக நகர்த்தினர். 14.2 ஆவது ஓவரில் சஞ்சு ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 130.
17ஆவது ஓவரை போலார்ட் வீச வந்தார். ராஜஸ்தான் அணியின் ஹெட்மையர் அந்த ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு ஃபோர் அடித்தார். 19ஆவது ஓவரில் பட்லர் தனது 100 ரன்களை அடித்தார். இது ஐபிஎல்லில் அவரது முதல் சதம். அந்த ஓவரில் பும்ரா மூன்று விக்கட்டுகளை எடுத்தார். அதனால் ரன்ரேட் குறைந்தது. இவ்வாறு ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆட வந்த மும்பை அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அடுத்து ஆட வந்த அமோல்ப்ரீத் சிங் நாலாவது ஓவரில் அவுட்டானார். இஷான் கிஷன் (54 ரன்), திலக் வர்மா (61 ரன்) நன்றாக விளையாடினர்கள். இந்த நேரத்தில் அஷ்வினும் சஹாலும் இரண்டு ஓவர்களை மிகச் சிறப்பாக வீசினர். 15ஆவது ஓவரில் அஶ்வின் திலக் வர்மாவின் விக்கட்டை எடுத்தார். அடுத்த ஓவரில் சஹால் இரண்டு விக்கட்டுகளை எடுத்தார்.
அப்போது மீதமுள்ள 24 பந்துகளில் 57 ரன் எடுக்கவேண்டியிருந்தது. பொலார்ட் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் சிக்சர் அடிப்பார்; ஃபோர் அடிப்பார் என அனைவரும் காத்துக் கொண்டிருக்க, அவர் டொக்கு வைத்துக் கொண்டிருந்தார். இறுதியில் ஒரு ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை மும்பை இழந்தது.
குஜராத் vs டெல்லி
டெல்லி அணி டாஸ் வென்று குஜராத் அணியை பேட்டிங் செய்யச் சொன்னது. குஜராத் அணி வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். ஷுப்மன் கில் (84 ரன்), விஜய் ஷங்கர் (13 ரன்), ஹர்திக் பாண்ட்யா (31 ரன்), மில்லர் (20 ரன்), திவாத்தியா (14) ரன் என அனைவரும் நன்றாக விளையாடினர். டெல்லி அணியில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்திருந்தது.
அடுத்த ஆட வந்த டெல்லி அணியின் முதல் விக்கட்டை, இரண்டாவது ஓவரில் ஹர்திக் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா நன்றாக பேட்டிங் செய்வதும், நான்கு ஓவரையும் முழுவதுமாக வீசுவது மட்டும் இல்லாமல் இந்தப் போட்டியில் தொடக்க பந்து வீச்சாளராக பந்து வீசியது இந்திய அணியில் அவர் இடம் பெற மற்றொரு வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லுகிறது.
டெல்லி அணியில் ப்ரித்வி ஷா இன்று சோபிக்கவில்லை. ரிஷப் பந்த் 29 பந்துகளில் 43 ரன் எடுத்தார். ஆனால் அவர் இன்னும் ஒரு ஐந்து ஓவராவது ஆடியிருக்க வேண்டும். அவர் 14.1 ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் குஜராத் அணி சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியை 157 ரன்களுக்கு அவுட்டாக்கியது. இதனால் குஜராத் அணி வெற்றிபெற்றது.