காமன்வெல்த் போட்டிகள் – நான்காம் நாள் 01.08.2022
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளின் நான்காம் நாள் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். 48 கிலோ பிரிவில் ஜுடோ விளையாட்டில் சுஷீலா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
60 கிலோ எடைப்பிரிவில் விஜய்குமார் யாதவ் வெண்கலப் பதக்கம் பெற்றார். ஹர்ஜிண்டர் கௌர் 71 கிலோ எடைப்பிரிவில் மேலுமொரு வெண்கலப் பதக்கம் பெற்றார்.
லான் பவுல்ஸ் (Lawn Bowls) விளையாட்டில் பெண்கள் அணி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க ஐயுடன் விளையாடத் தகுதி பெற்றிருக்கிறது. இதனால் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதி. இந்த லான் பவுல்ஸ் விளையாட்டு நம்முடைய சிறுவர்கள் ஆடும் கோலிக்குண்டு விளையாட்டுப் போன்றது.
தரையில் உருட்டி வீச நமக்கு பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் ஒரு பந்து தரப்படும். அந்த பந்தில் எடை சீராக இருக்காது. சுமார் 30 மீட்டர் தூரத்தில் ஒரு பகுதியில் ஒரு வெள்ளைப் பந்து, சில கருப்பு பந்துகள் இருக்கும்.
நாம் வீசுகிற பந்துகள் வெள்ளை நிறப்பந்தான ‘ஜாக்’ கருப்பு நிறப் பந்தான ‘கெட்டி’ இவைகளுக்கு எவ்வளவு அருகில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டு வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
டேபிள் டென்னிஸ் போட்டியில் நேற்று இந்திய ஆண்கள் அணி நைஜீரிய அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எனவே டேபிள் டென்னிசிலும் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் நிச்சயம்.
பாட்மிண்டன் போட்டியில் இந்திய கலப்பு அணி சிங்கப்பூர் அணியை அரையிறுதியில் தோற்கடித்து இறுப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியிலும் ஒரு தங்கம் அல்லது வெள்ளி நிச்சயம்.
முதலில் ஆண்கள் இரட்டையர் ஜோடி 21-11. 21-12 என்ற செல் கணக்கில் வென்றது; அடுத்து பி.வி. சிந்து ஜியா-மின்-யியோ வை 21-11, 21-12 என்ற செட் கணக்கில் வென்றார்; அதன் பின்னர் லக்ஷ்யா சென் ஆண்கள் ஒற்றையர் பொட்டியில் தற்போதைய உலக சாம்பியனான லோ-கீன்-யூ வை வென்றார்.
எனவே இந்திய கலப்பு அணி 3-0 என சிங்கப்பூரை அரையிறுதிப் போட்டியில் வென்றது.