புதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்தின் கீழ் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 8-ம் வகுப்பு கல்வித்தகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு கல்வித் தகுதி தேவை என்பதை மத்திய அரசு நீக்கியது தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது.
பொதுவாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
.50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி – இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
அதுபோல பேருந்து, லாரி போன்ற கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெற இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அத்துடன் கல்வித் தகுதி 8-ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சொந்த பயன்பாட்டுக்காக கனரக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.