சென்னை கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், அதே பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த சுனிதா என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுப்பெண் சுனிதா, வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதனையடுத்து சுனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கார்த்திக் குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திக் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சுனிதாவின் உடல் கயிற்றில் இருந்து இறக்கி கீழே வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுனிதாவின் தலையில் ரத்த காயம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுனிதாவின் தந்தை, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அந்த புகாரில், எனது மகள் சுனிதாவை கார்த்திக் என்பவருக்குக் கடந்த வருடம் திருமணம் செய்து கொடுத்தேன்.
ஆனால் திருமணமான ஒரு மாதத்திலேயே கூடுதலாக வரதட்சணையாக பணம் கேட்டு கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் சுனிதாவை துன்புறுத்தி, எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும், மேலும் சுனிதாவிடம் கார்த்திக்கும், அவரது குடும்பத்தினரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும், சுனிதாவை கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் எனவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.