தேனி அருகே தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். கொரோனோ ஊரடங்கால் மகாராஷ்டிரா மாநிலத்திலிலேயே தங்கியிருந்த அவர், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதையடுத்து கடந்த 19 ஆம் தேதி வாகனம் மூலம் சொந்த ஊரான பாலக்கோம்புக்கு வந்துள்ளார்.
தேனிமாவட்ட எல்லைப்பகுதியான ஆண்டிபட்டி கணவாய்ச் சோதனைச் சாவடியில் வேலுச்சாமியை மடக்கிய காவல் துறையினர், அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி ஆண்டிபட்டியருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தப்படும் வார்டில் தங்க வைத்தனர்.
கொரோனா தொற்று முடிவுக்காக காத்திருந்த வேலுச்சாமிக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வேலுச்சாமி தனது அறையிலே மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.