தற்போது “அம்மா” பெயர் இல்லாத திட்டங்கள் ஏதாவது இன்னும் பாக்கி இருக்கிறதா? “டாஸ்மாக்” கடைகளுக்கும் “அம்மா” பெயர் வைக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டிலே ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா? சட்டமன்றம் என்ற ஒன்று இருக்கிறதா? அங்கே எதிர்க் கட்சிகள் இயங்க இடம் அளிக்கப்படுகிறதா? அரசை எதிர்த்து யாராவது ஒரு வார்த்தை கூற வாய்ப்பு அளிக்கப் படுகிறதா? கடந்த ஒரு மாதமாக சட்டப்பேரவை நடைபெற்றிருக்கிறது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் “எனது தலைமையிலான அரசு” என்று பேச்சுக்குப் பேச்சுச் சொல்லிக் கொள்வதிலும், “நான் ஆணையிட்டேன்” என்று தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வதிலும்தான் நேரம் போகிறது. அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போதாவது முதல்வர் அவையிலே இருக்கிறாரா?
கடந்த நான்காண்டு காலமாகத் தூங்கி விட்டு, தற்போது பொதுத் தேர்தல் வருகிறது என்றதும் திடீரென்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டுவதாக அறிவித்து, அதுவும் கேலிக் கூத்தாக முடிந்துள்ளது. யாரும் இந்த ஆட்சியை நம்பி – ஆட்சியாளர்களின் வெற்று வார்த்தைகளை நம்பி, தொழில் தொடங்குவதாக இல்லை. ஆனால் ஆட்சி யினரின் கெஞ்சலுக்கு இசைந்து பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதாக ஒருசிலர் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டே நாள் மாநாட்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக அறிவித்தார். கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 26 நாடுகளுக்குப் பயணம் செய்து அதன் மூலமாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சேர்த்துக் கிடைத்த முதலீடே மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய்தான் என்று மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது முதலமைச்சர் இரண்டே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.
2016ஆம் ஆண்டுத் தேர்தலில் நமக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் மறந்து விடக் கூடாது. எதிரிகளின் பண பலத்தையோ, சூழ்ச்சிகளையோ கண்டு பயப்படத் தேவையில்லை. நமது இலட்சியம் மிகத் தூய்மையானது. அது இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றே தீரும் என்று உங்களுக்குத் தெரிவிப்பதுடன், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக உறுதியோடு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கு உண்மையான நிலை இப்போதுதான் புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்து கொண்ட மக்கள் நம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். திசை மாறிச் சென்றவர்கள் எல்லாம், தி.மு. கழகமே தமிழகத்தின் நம்பிக்கை என்று தீர்மானித்து, நம் பக்கம் அணி வகுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் நாம் சோம்பியிருந்து விடக் கூடாது. கடமை ஆற்றுவதிலிருந்து நழுவி விடக் கூடாது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


