சென்னை:
இலங்கைப் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்டசபைத் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.
நேற்று மாலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இல்லை.
நான் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து பேசினேன். அப்போது இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ்க் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன. மேலும் உள்நாட்டு விசாரணைக் குழுவில் வெளிநாட்டினர் இடம் பெறலாம் என்றும் ரணில் ஆலோசனை தெரிவித்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நண்பர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. பீகார் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தான் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.


