சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விட்டுவிட்டு பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் மத்திய வங்கக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, நள்ளிரவில் வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



