அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறியும் மொபைல் செயலியை சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. யாருக்கு எப்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்கிற அளவுக்கு உலக மக்கள் பீதியில் உள்ளனர்.தற்போது வரை சீனாவில் தான் இந்த வைரஸ் பாதிப்பு 99 சதவீதம் ஏற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் கூறியுள்ளது. எனினும், சீனாவை அடுத்துவுள்ள அண்டை நாடுகளில் இதனுடைய தாக்கம் உணரப்பட்டு வருகிறது.
இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலித்துள்ளது. பல்வேறு நாடுகள் சீனாவுடனான வர்த்தக உறவை தற்காலிகமாக நிறுத்துவைத்துள்ளன. பல்வேறு நாடுகளில் சீனப் பயணிகள் அல்லது சீனாவுக்கு சென்று திரும்பிய சொந்த நாட்டினர் பிரவேசிப்பதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவுள்ளது. தற்போது வரை 1500-க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழதுள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் பல்வேறு மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இதனுடைய பரவலை கட்டுப்படுத்த முடியாமலும், வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுப்பிடிக்க முடியாமலும் சீன அரசு திண்டாடி வருகிறது. இதற்கிடையில், பல்வேறு நாட்டிலுள்ள மருத்துவ அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுப்பிடிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு இயல்பான அளவில் இருமல், சளி மற்றும் வறண்ட தொண்டை போன்ற அறிகுறிகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது கணிப்பது கடினம். மேலும், தனக்கு ஏற்பட்டிருப்பது கொரோனா தொற்று என்று தெரியாமலும் நோயாளிகள் பலர் இயல்பாக நடமாடிக் கொண்டிருக்கக்கூடும்.
இதற்கு முடிவு கட்டும் நோக்கில் சீன அரசு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. close condact detector என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த செயலி, அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.
சீனாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த செயலியை கடந்த பிப்-8ம் தேதி வெளியிட்டது. இதை மொபைலில் பதிவிறக்கம் செய்தவுடன், பயன்பாட்டாளரின் செல்போன் எண் மற்றும் அரசு வழங்கிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
அதை தொடர்ந்து பொதுமக்கள் தாராளமாக இந்த செயலியை பயன்படுத்த தொடங்கலாம். அதன்படி மொபைல் செயல் வழியே அருகில் இருப்பவர்களை பார்க்கும் போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் சிவப்பு நிறத்திலும், வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர் நீல நிறத்திலும் தெரிவார்கள் என சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இந்த செயலி நம்பகமாக தகவலை வழங்கி வருவதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்த செயலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கண்டறிகிறது என்பது குறித்து சீனா அரசு எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.