பீஜிங்: முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் சீனா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இணையதளம் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றன.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட, சீனாவின் தலைநகர் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.
‘கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது மையப்புள்ளியாக விளங்கிய வூஹான் நகரில், கடந்த சில வாரங்களாக, புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்து இன்று காலை வீடு திரும்பினார். இருந்தும் மே 6ம் தேதிக்கு பின்னரே வூஹானில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
மற்ற மாகாணங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்படத் துவங்கியுள்ளன’ என, சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ‘வூஹானில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என, சீனா அறிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கொரோனா விவகாரத்தில், சீனா மீண்டும் மீண்டும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது’ என, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.